| Scorecard: | Sri Lanka v India |
| Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 9th August 2008
வணக்கம்.
 
இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவின் போது, இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 
இந்த அரு அணிகளுக்கும் இடையே, கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. காலேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 
முன்னதாக ஆடிய இந்திய அணி இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸை 249 ரன்களுக்குள் இழந்தது. இதையடுத்து ஆடிய இலங்கை அணி நேறைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. வாண்டர்ட் 3 ரன்களுடனும், சமிந்தா வாஸ் 0 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
இன்று காலை இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது. வாண்டர்ட்டும், சமிந்தா வாஸும் இணைந்து நிதானமாக விளையாடினர். 14 ரன்கள் எடுத்திருந்த வாண்டர்ட் ஜாகீர் கான் பந்துவீச்சில் வீழ்ந்தார். 
இவரையடுத்து சமிந்தா வாஸ் உடன் சங்க்காரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய சங்ககாரா 79 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். முன்னாதாக சங்க்காரா 34 ரன்கள் எடுத்திருந்தபோது கும்ப்ளே வீசிய பந்தில் திராவிட் பக்கம் திருப்பி அடித்தார். அந்த பிடியை திராவிட் தவறவிட்டார். 
மறுபுறம் தேர்ந்த ஆட்டக்காரரைப்போல் விளையாடிய சமிந்த வாஸ் அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் 47 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் ஷேவாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 3 ரன்களில் அரைசதத்தை இழந்தது மட்டுமின்றி, 2 ரன்களில் டெஸ்ட் அரங்கில் 3000 ரன்கள் என்ற சாதனையையும் இழந்தார். 
இவரையடுத்து இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே வந்தார் இவர் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன்சிங் சுழலில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 
இவரையடுத்து சங்ககாராவுடன் திலன் சமரவீரா ஜோடி சேர்ந்தார். இதன்பிறகு கும்ளே வீசிய பந்தில் சங்ககாரா எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தது தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவரோ ஆட்டமிழக்கவில்லை என்று தவறாக தீர்ப்பளித்தார். 
சச்சின் தெண்டுல்கர் பீல்டிங் செய்யும்போது, கீழே விழுந்ததில் அவரது கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் பாதியிலேயே அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் பீல்டிங் செய்தார். 
திலன் சமரவீரா 35 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாகீர்கான் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த தில்ஷான் 23 ரன்களுக்கு கும்ளே பந்துவீச்சில் பெவலியன் திரும்பினர். நிதானமாக விளையாடிய சங்ககரா டெஸ்டில் தனது 17வது சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாக முடிக்கப்பட்டது. இலங்கை இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா 107 ரனகளுடனும், பிரசன்னா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 
ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, அனில் கும்ப்ளே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார். 
இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது இந்தியாவின் சச்சின், லட்சுமண், பார்த்திவ் படேல் காயமடைந்தனர். இன்று காலையில் போட்டி துவங்குவதற்கு முன்னதாக நடந்த பயிற்சியின் போது இந்திய வீரர் லட்சுமணுக்கு கையில் அடிபட்டது. இதையடுத்து இவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தின்போது, இவர் களமிறங்கவில்லை இவருக்கு பதிலாக ரோஹித் சர்மா பீல்டிங் செய்தார். 
இந்நிலையில் கும்ளே வீசிய 47வது ஓவரில் வாஸ் அடித்த பந்தை பிடிக்க முயன்றபோது, சச்சினுக்கு கையில் காயம் ஏற்பட்டது. வலி பொறுக்கமுடியாமல் துடித்த சச்சின், அதன் பின்னர் பீல்டிங் செய்யவில்லை. இவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் பீல்டிங் செய்யதார். சச்சின், லட்சுமண் இருவரும் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய முடியும் என இந்திய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இவர்களை தொடர்ந்து இஷாந்த் சர்மா பந்துவீசும் போது தடுமாறி விழுந்தார். அதன் பின்னர் பந்துவீச வரவில்லை. 
நன்றி, வணக்கம்

