| Scorecard: | Sri Lanka v India |
| Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 28th August 2008
கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒருதினப் போட்டியில் இலங்கை அணியை, இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி, ஆசிய கோப்பையில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இலங்கையும், அடுத்த இரண்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்திய அணி தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது. நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய நான்காவது போட்டி மழையின் காரணமாக, ஒரு நாள் தாமதமாக நேற்று கொழும்புவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. 
மூன்றாவது ஒருதினப் போட்டியில் விளையாடிய இந்திய அணியே இப்போட்டியிலும் களமிறங்கியது. ஆனால் இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த போட்டியில் சமரசில்வா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வர்ணபுரா இடம்பிடித்தார். 
இத்தொடரில் தொடர்ந்து நான்காவது முறையும், பூவா தலையா வென்ற வென்ற இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கௌதம் காம்பீரும், விராட் கோஹ்லியும் வந்தனர். துவக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, இலங்கை பந்துவீச்சை ஓரளவு சமாளித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காம்பிர் குலசேகரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் கணக்கில் 17 ரன்கள் அடங்கும். 
அடுத்து வந்த யுவராஜ்சிங் இம்முறையும் சொதப்பினார். இவர் ரன் ஏதும் எடுக்காமல் சமிந்தா வாஸ் பந்துவீச்சிில் ஜெயவர்தனாவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். இது, ஒருதின அரங்கில் சமிந்தா வாஸ் வீழ்த்தும் 400வது விக்கெட்டாகும். 
இவரையடுத்து விராட் கோஹ்லியுடன், சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் இலங்கை வீரர்களை சமாளித்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி ஒரு நாள் அரங்கில் தனது முதல் அரைசதத்தைக் கடந்தார். இவர் 7 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்து, வெளியேறினார். 
இந்நிலையில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய கேப்டன் மஹேந்திரசிங் தோனி, சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். மூன்றாவது போட்டியில் கலக்கிய இந்த ஜோடி நேற்றும் அசத்தியது. இலங்கை பந்துவீச்சை ஒரு கைபார்த்த ரெய்னா, முரளிதரன் வீசிய பந்தில் பவுண்டரி அடித்து ஒரு நாள் போட்டிகளில் தனது 7வது அரைசதத்தை பதிவு செய்தார். 
மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த தோனியும் தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 24வது அரைசதமாக அமைந்தது. 
அதிரடியைத் தொடர்ந்த சுரேஷ் ரெய்னா, முரளிதரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து, மிரட்டினார். இந்த ஜோடி தொடர்ந்து அசத்த, இந்திய அணி 38-வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. 
நான்காவது விக்கெட்டுக்கு இவர்கள் 143 ரன்கள் எடுத்தநிலையில் ரெய்னா, திலன் துஷாரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் 78 பந்துகளில் ஒரு சிக்சர், 6 பவுண்டரிகள் உள்பட 76 ரன்கள் எடுத்தார். இவரை தொடர்ந்து தோனியும் பெவிலியன் திரும்பினார். இவர் 4 பவுண்டரிகளின் உதவியுடன் 71 ரன்கள் எடுத்தார். 
தோனி ஆட்டமிழந்தபோது இந்திய அணி 42.4 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்திருந்தது. எப்படியும் 280 ரன்கள் குவித்து விடலாம் என்ற நிலை இருந்தது. 
41 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, சுரேஷ் ரெய்னா, தோனிக்குப் பின்னர் வந்தவர்கள் சரியாக விளையாடாததால் 258 ரன்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. 
அடுத்து வந்த பத்ரிநாத், ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடவேண்டிய கடைசிக்கட்டத்தில், மந்தமாக விளையாடிய இந்த ஜோடி இந்தியாவின் ரன்வேகத்தை குறைத்தது. பத்ரிநாத் 6 ரன்களுடனும், ரோஹித் சர்மா 18 ரன்களுடனுதம் விரைவில் வெளியேறி, ஏமாற்றம் அளித்தனர். 
டெயிலெண்டர்களும் வரிசையாக நடையை கட்ட, இந்திய அணி 49.4 ஓவரில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி கடைசி 34 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 
இலங்கை அணி தரப்பில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷாரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நுவன் குலசேகரா, சமிந்தா வாஸ், அஜந்தா மெண்டிஸ், முரளிதரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். 
இதையடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணிக்கு சனத் ஜெயசூர்யா அதிரடி துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், மறுமுனையில் இவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. வர்ணபுரா ரன் ஏதும் எடுக்காமலும், சங்ககாரா 6 ரன்களுடனும் விரைவில் ஆட்டமிழந்தனர். 
இந்திய வீரர்களின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த சனத் ஜெயசூர்யா, முனாப் படேல் பந்துவீச்சில்ல் பவுண்டரி அடித்து, ஒரு நாள் அரங்கில் தனது 66வது அரைசதத்தைக் கடந்தார். 
வேகப்பந்து வீச்சை இவர் அடித்து நொறுக்க, கேப்டன் தோனி ஹர்பஜன் சிங்கை பந்து வீச அழைத்தார். இதற்கு உடனடி பலன் கிடைத்தது. இவர், ஜெயசூர்யாவை வெளியேற்றி, இந்தியாவுக்கு நம்பிக்கை தந்தார். ஜெயசூர்யா 52 பந்துகளில் 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 60 ரன்கள் எடுத்தார். 
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜெயவர்தனே இம்முறை 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த கபுகேதரா 30 ரன்களும், தில்ஷான் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியாவின் வெற்றி உறுதியானது. 
பந்து வீச்சில் கலக்கிய திலன் துஷாரா பேட்டிங்கிலும் கலக்கினார். யுவராஜ் சிங் வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்கள் விளாசி அசத்தினார். இவர் ஆடியதைப் பார்த்ததும் இந்தியாவின் வெற்றிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று கூட எண்ணத் தோன்றியது. அந்த அளவிற்கு இவரது ஆட்டம் அதிரடியாக இருந்தது. இவர் 29 பந்துகளில் 2 சிக்ஆர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் குவித்திருந்தபோது ஜாகீர்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்ற டெயிலெண்டர்கள் விரைவில் பெவிலியன் திரும்ப, இலங்கை அணி 46.3 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி, சமீபத்தில் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது. ஆட்டநாயகன் விருதை சுரேஷ் ரெய்னா தட்டிச் சென்றார். 
இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை, இதே மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. 
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் தொடரை வென்ற இந்தியா: இப்போட்டியில் வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, சாதனை படைத்துள்ளது. 
கடைசியாக முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, கடந்த 1998- ல் இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றிருந்தது. 
400 விக்கெட்டுகள் வீழ்த்திய வாஸ்: நேற்று யுவராஜ் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை வீரர் சமிந்தா வாஸ், சர்வதேச ஒரு நாள் அரங்கில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இது அவர் ஆடிய 322 வது ஒருதினப் போட்டியாகும். 
இப்பட்டியிலில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் (356 ஆட்டங்கள்) 502 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், இலங்கையின் முத்தையா முரளிதரன் (314 ஆட்டங்கள்) 479 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் (262 ஆட்டங்கள்) 416 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். 
நன்றி, வணக்கம்.LATEST SCORES
CURRENT EVENTS
- Bahrain in Bhutan 2025/26
- Croatia in Spain 2025/26
- England in Australia 2025/26
- Ireland Women in South Africa 2025/26
- Oman Women's International T20 Tri-Series 2025/26
- South Africa in India 2025/26
- South East Asia Games Men's Twenty20 Competition 2025/26
- South East Asia Games Women's Twenty20 Competition 2025/26
- Sri Lanka Women in India 2025/26
- West Africa Trophy 2025/26
- West Indies in New Zealand 2025/26
View all Current Events CLICK HERE


